மட்டன் சுக்கான்னா இது போல தான் செய்யணும்

John Little John
0
மட்டன் சுக்கான்னா இது போல தான் செய்யணும்
மட்டன் சுக்கா செய்வதற்கான மிக எளிமையான செய்முறையை இதோ,.....

 பாரம்பரிய உணவுகளில் மாமிச உணவு வகைகளும் ஒன்று. இந்த மாமிச உணவுகளில் ஆட்டுக்கறியில் செய்யப்படும் உணவுகள் மிகவும் சுவையாகவும், பிரபலமானவைகளாக உள்ளன. அதிலும் ஆட்டுக்கறியில் செய்யப்படும் ப்ரைகளுக்கு எப்போதுமே உணவு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஆட்டுக்கறி வைத்து செய்யப்படும் குழம்புகளுக்கு எப்படி தனிச்சுவை இருக்கிறதோ அதே போல்தான் இவற்றில் செய்யப்படும் வறுவல்களுக்கும். இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் மட்டன் சுக்கா என்று அழைக்கப்படும் இந்த பிரபலமான சைடிஷ்க்கு தனிதத்துவமான சுவை உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், இதனை செய்யும் போது சேர்க்கப்படும் தனித்துவ மசாலாக்களை குறிப்பிடலாம்.
அப்படி என்னென்ன மசாலாக்களை இந்த சுக்கா ப்ரைக்கு சேர்க்க வேண்டும். இவற்றுக்கான எளிய செய்முறை தான் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வேக வைக்க தேவையானவை

ஆட்டுக்கறி – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு
மிளகு
சீரகம்
மல்லி
வர மிளகாய்

சுக்கா வறுவல் செய்ய தேவையானவை

நல்லெண்ணெய்
வர மிளகாய் 
பிரிஞ்சி இலை
பட்டை
சோம்பு
சின்ன வெங்காயம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – சிறிதளவு
கருவேப்பிலை
மிளகாய் பொடி
மல்லி பொடி
கல் உப்பு

நாம்  செய்ய வேண்டிய முறை

முதலில் நாம் சுத்தமான நீரில் நன்கு கழுவி வைத்துள்ள ஆட்டுக்கறியை எடுத்து, அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
 இச்சமயத்தில், சுக்கா செய்யத் தேவையான மசாலாவை செய்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு மல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், இறுதியாக மிளகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து தனியாக ஆற வைத்துக்கொள்வோம்.  ஆறிய பிறகு அவற்றை  அரைத்து எடுத்து வைத்துக்கொள்வோம்.

இப்போது சுக்கா வறுவல் செய்ய, ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய், பிரிஞ்சி இலை, பட்டை , சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை இட்டு கிளறவும்.

பின்பு தேவையான அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கிய பிறகு சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கவும். அதன் பின்னர் மிளகாய் பொடி, மல்லி பொடி, கல் உப்பு போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு ஆட்டுக்கறியை வேக வைத்த தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

இவை நன்கு கொதித்து வந்ததும் முன்னர் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். அவற்றை நன்கு கிளறி விட்டு சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். அவை சுண்டி வந்ததும் முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை மட்டன் மீது தெளித்து விடவும். பிறகு நன்கு கிளறி மீண்டும் சுண்ட விடவும். கீழே இறக்கும் போது அவற்றின் மீது கருவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை சேர்க்கவும். இப்பொழுது மட்டன் சுக்கா தயார்.....

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top